செவ்வாய், 9 ஜூலை, 2013

என் மகிழ்ச்சியின் ரகசியம்.. !

ஒவ்வொரு  முறையும்

என்னை பார்த்து 
சிரித்து ஆச்சர்யக்கும்
 
என் குழந்தையை போலவே...
வாழ்வின் அடுத்தடுத்த நொடிகளை 
ஆச்சர்யத்துடன் கண்டு ரசிக்கிறேன்..!

சனி, 29 ஜூன், 2013

திண்ணை..!

அம்மா அடித்த  போதும்
அப்பா கடிந்த போதும்
தஞ்சம் புகுந்தது
திண்ணையின் மடிகளில் தான்..

விடுமுறை நாட்களில் எல்லாம்
எங்களை வளர்த்து விட்ட திண்ணைகள்

வருவோர் போவோர்க்கெல்லாம்
விருந்தினர் மாளிகையாய்..
விருந்தினர்க்கோ
இளைப்பாறும் மண்டபமாய்..

காத்து கிடந்த திண்ணைகள்..
இன்று கட்டிட
வரைபடங்களில் கூட
காணமுடிவதில்லை .
.
தொலைக்காட்சி தொடர்களினால்
தன் வீட்டு  அன்னையையும்
எதிர் வீட்டு அத்தையையும்
பக்கத்து வீட்டு பாட்டியையும்
அடுத்த வீட்டு அக்காவையும்
 
தொலைத்துவிட்டு
தனியாய் தவிப்போடு கிடக்கின்றது
எஞ்சிருக்கும் அத்தனை  திண்ணைகளும் ....

விழி தீண்டலில் விதைத்தவை ..(பாகம்-4)

மழை பற்றிய கவிதைகள்
எனக்கு பிடிக்கும்..
இப்போதெல்லாம்
மழையைக் கூட பிடிப்பதில்லை
நீ நனைந்து  வருகையில் எல்லாம்..
****************************************************************************
எனக்கும் உனக்குமான
சண்டையிலும் போட்டியிலும்
எப்போதும்  வெல்வது
நம் காதலாகத்தான் இருக்கிறது.
****************************************************************************
என்னை நீ
கட்டிக் கொண்டதற்கு
ஆயிரம் காரணங்கள்
உனக்கு இருந்திருக்கலாம்  ...
நான் உன்னை காதலிப்பது
என்னை நீ கட்டிக் கொண்ட
ஒரு காரணத்திற்காகத்தான் .....
****************************************************************************
என் காதலை சொல்ல
 நான் கவிதையில்
மெனக்கெடும்  போதெல்லாம் ..
கண்ணடித்தே ஆயிரம் கவிதைகளை  சொல்லிவிடுகிறாய்..
****************************************************************************
உன் நிழற்படம் பார்த்து
உன்னை யாரேனும்
காதலிக்க  போகிறார்கள்
என கிண்டல் செய்கிறாய்..
என் நிஜத்தை
நீ வைத்திருக்கும்
தைரியத்தில் தானே..
****************************************************************************

புதன், 19 ஜூன், 2013

விழி தீண்டலில் விதைத்தவை ..(பாகம்-2)

என் அழைப்புகளை
 நீ நிராகரிக்கும் போதெல்லாம்
எனக்கு கோபம் வருவது
என்னவோ அலைபேசியை
கண்டுபிடித்தவன் மீதுதான்..
****************************************************************************
எப்படி வேண்டுமானாலும்
என்னிடம் சண்டை இடு..!
சமாதானமாய் மட்டும்
இன்னும் வேண்டும்
என்ற அளவிற்கு மட்டும்
முத்தங்களை கொடுக்க பழகிக் கொள்..!
****************************************************************************
மழைக் காலங்களில்
நீ மறந்து விட்டு போன
குடையோடு சண்டையிட்டே
நீ வரும் வரை
என் நேரங்களை கழிக்கிறேன்....
****************************************************************************
காலையில் எழும் போதே
மனம்  தேட ஆரம்பிக்கிறது
உன் வரவை எதிர்பார்க்கும்
மாலை பொழுதை..
****************************************************************************
ஒன்றன் பின்
ஒன்றாய் எழுதினால்
அது தானே கவிதை
என கிண்டல் செய்யும் போக்கிரி
உன்னை தான்
கவிதையாக்கி  கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு  நாளும்..
****************************************************************************

விழி தீண்டலில் விதைத்தவை.. (பாகம்-3)

அதென்னவோ
 நீ  என்னை விட்டு
விலகி இருக்கும்
நேரங்களில் தான் தெரிகிறது
எனக்கு உன் மீதான காதல்..
****************************************************************************
உன்னை பார்ப்பதற்கு   முன்
எனக்கு காதல் தெரியாது...!
இன்று காதலுக்கு...
வேறு யாரையும் தெரியாது
உன்னோடு  செலவழிக்கவே
உலக காதல் அத்தனையும்
நான் மட்டுமே வாங்கி  கொண்டேன் ...!
****************************************************************************
நீ காதலை சொல்லி
நிராகரித்தவளை
கோவிலில் தற்செயலாய்
ஒருமுறை காட்டினாய்.
என் கண்களுக்கு என்னவோ
அவள் கடவுளாய் தெரிந்தாள்...
****************************************************************************என் முந்தானையில்
தலை துவட்டிக்  கொள்ளவே
மழையில் நனைந்து வரும்
திருடன் தானே நீ..!. .
****************************************************************************
எனக்கு வந்த
காதல் கடிதங்களை
முதல் இரவில்
உன்னிடம் காட்டிய  பொழுது
இப்படியா சந்தேகித்து
 கேள்வி கேட்பாய்
"என்னையாவது காதலிப்பாயா என.."
****************************************************************************

செவ்வாய், 18 ஜூன், 2013

விழி தீண்டலில் விதைத்தவை..(பாகம்-1)

என்ன செய்தாய் என்னை
நீ இல்லாமல்
இருபத்தைந்து வருடம் 
வாழ முடிந்த எனக்கு.
இப்போதெல்லாம் 
ஐந்து நொடிகள் கூட 
வாழ தெரியவில்லையே..
****************************************************************************
என்னை செல்ல பெயர் 
வைத்து அழைத்து அழைத்தே 
என் உண்மை பெயரை 
மறந்தவன் தானே நீ....!
****************************************************************************
வருடங்கள் போன பின்பும் 
உந்தன் காதல் 
இப்படியே இருக்குமா..? 
என கேட்கும்  
என் அப்பாவி கணவா
நீ  அறிவியல் அறிந்ததில்லையா
உயிருள்ளவை எல்லாமே வளரும் என்று ..!
****************************************************************************
"உன்  நினைவுகள்
என் இரத்தத்தில் கலந்துவிட்டது"
என சொன்ன உனக்கு 
எப்படி மனம் வந்தது 
இன்று "இரத்த தானம்" செய்ய....!
***************************************************************************
அலை பேசியில் 
உன்னை அழைக்கையில் 
ஏதோ ஒரு குரல் 
தொடர்பு கொள்ள முடியாது 
என்பதை கேட்டதற்கே
உயிர் ஒரு நிமிடம் 
நின்றுவிட்டு துடிக்கிறதே.. 
****************************************************************************

வெள்ளி, 13 ஜூலை, 2012

வெற்றியின் ரகசியம்..!


 

வாடகை சைக்கிள் 
கற்றுத் தந்தது எனக்கான வாழ்வை.. 

அரைமணி நேரம் தான் 
முடிந்து விடுமோ எனும் அச்சத்தில்.. 

விழுந்து எழுந்து 
அவசரமாய் கற்றுக்கொண்டேன்.. 

அந்த அச்சத்தையே 
வாழ்கையை கற்றுக்கொள்ளவும் 
பிரயோகப் படுத்துகிறேன்..!


சனி, 21 ஏப்ரல், 2012

தாலி கட்ட வருவானோ மகராசன்..!

 துணிவில்லா பயலுக்கு
கழுத்து நீட்டி..
கரை சேர்த்தாலே
என்னை ஒருத்தி..

பொறந்தப்போ தெரியலையே.
என் பொழப்பு சிரிக்கும்னு.. .

தாலி தான பொண்ணுக்கு வேலி
கொண்டாந்தது கட்டிட
எனக்கு ஏது நாதி..

காசு பணம் குடுக்காத சாமி..
ஆச மட்டும் அள்ளித் தந்தானே பாவி .

இடிச்சிட்டு போறவனுக்கு கூட..
என் கைய புடிச்சிட்டு
போக தோணலியே ..

தெரு விளக்கா என் கத
ஆகும் முன்னே..
தேர் கொண்டு
வருவானோ மகராசன் ..

பருவம் கூட ஆசை தந்தும்
பாதை மாறி போகலையே..

மாலை மாத்த மாமன் வந்தா
பாதம் தொட்டு வாழுறேன்..

பட்டினியா கிடந்துக்கிறேன்
முடிஞ்சவரை ..
பத்தினியா தான் வாழுவேன்
என் உசுருள்ளவரை

புரிந்துக்கொண்டேன் காதல் இன்னதென்று..!

சொல்லாமலே நிற்கிறேன்
உன் நிழல் முன்பு..

கொல்லாமலே சாகிறேன்
உன் விழி கண்டு..

கல்லாமலே எழுதினேன்
கவி ஒன்று..

தீராத நோய் தானோ திணறினேன்
எனக்குள் வந்ததென்று ..

காற்றைக்கூட கண்டறிகிறேன்
உன்னால் இன்று..

கண் பார்த்து சொல்ல
வார்த்தை மூன்று ..

முடியாமலே தோற்றுப் புரிந்தேன்
காதல் இன்னதென்று..


செவ்வாய், 17 ஏப்ரல், 2012

வேண்டுமோ உன் காதல் எனக்கு..!

 

அழகாய்த்தான் தெரிந்ததாய்
அலை பாய்ந்த என் மனதிற்கு..

கிள்ளித் தருவாய் என
நினைத்த வேளைகளில்
கவிதைகளை அள்ளித் தந்தாய்..

வாழ்த்த வந்தவர் என
நினைத்த நேரத்தில்
வார்த்தைகளால் வீழ்த்த முயல்கிறாய்..

சங்கீதம் சொன்ன உன் விழிகளில்
சந்தேகம் குடிக் கொள்ள
சம்மதமின்றியே கோபமெனும்
சாத்தானை என் மீது ஏவினாய்..

உலக கவினற்கெல்லாம்
கனவுகள் தான் அவர்தம் சிறகுகள்..
அதுகூட உன் கைப்பிடியில்
அடக்க நினைக்கிறாய்..

சொந்தமாய் கவிநனை கேட்கிறாய்..
கனவுகளையும் அல்லவா சேர்த்து
பறிக்கத் துடிக்கிறாய்..

உலகத்தையே உறவாய் நினைக்கும்
எனக்கு உனதுறவில்
உலகம் பூட்ட நினைக்கிறாய்..

உன்னை இழப்பதால்
இன்று
இதயம் வெற்றிடமாகலாம்..

நாளை
அந்த வானமோ
எந்தன் வசமாகும்..

காதல் கவிதைகள்

என் காதோரம்
நீ தந்த ஒற்றை
மூச்சுக்காற்றில்
என் வாழ் நாள்
முழுமைக்குமான
சுவாசத்தை பெற்றுவிட்டேன்...!
 **********************************************

என்னை பார்த்ததும்
மறைக்கும்
உன் சிகரெட்டை போலவே
உன்னை பார்க்கும் போதெல்லாம்
நானும் மறைக்கிறேன்
உன் மீதுள்ள ஆசையை.. !
 ***************************************************

என்னைப்பற்றி
சொல்லும்
போதெல்லாம்
கண்டிப்பாய்
மறைத்துவிடுகிறேன்
என்னை பற்றி உன்னிடம்..!
************************************************

நீ அறிவாயா..?
உன்னை
கடந்து போகும் காற்றில்
மூன்றில் ஒரு பங்கு
என் சுவாசம் என்பதை..!
*****************************************************

நியாபகமாய்
கிழிக்கப்பட்ட
பக்கங்களில் எல்லாம்
எப்போதும்  போல்
மறதியாய் அமர்ந்திருக்கிறது
உன் நினைவுகள்..!
****************************************************

உனக்கு தெரியாது..!
பத்திரமாய் இருந்துக்கொள் என
நீ பிரிகையில்
சொல்லிச் செல்லும்
வார்த்தைகள் தான்
ஒவ்வொரு  நாளும்
என்னை பத்திரப்படுத்திக் கொண்டிருக்கிறது  என்ற விவரம்..!
******************************************************************************************

உன்னை காதலித்து
உருகி  உருகி
எழுதிய வார்த்தைகளால்
உச்சபட்சமாய் எனக்கென
மிஞ்சியிருந்தது
அழகாய் மாறியிருந்த
கையெழுத்தும் ..
கவியாய்  மாற்றியமைத்த
தலைஎழுத்தும் தான்..!
****************************************************************************

இது தான் வாழ்க்கை..!

 

போராடி வாழ
எண்ணம் மறுத்தது..

போராட்டம் மட்டுமே
எனக்கு வாழ்வா நெஞ்சம் கொதித்தது..

விரக்தியோடு
சாலையில் நடந்தேன்..

உடைந்த பொம்மை ஒன்றை
வீதியில் கண்டெடுத்த குழந்தை..

விண்வெளியில் மிதப்பது போன்று
புன்னகை பூத்தது..

கிடைத்ததை வைத்து
மகிழ்வை தேடு..

எனும் உண்மை
சாலையோரக் குழந்தை
எனக்கு சொன்னது..

முன்பு விட
வேகமாய் நடந்தேன்
அதே வீதியில்...
இப்போது விரக்தி இல்லை என்னில்....

உன்னால் கிடைத்தது இது மட்டும் தான்..!

 

உனக்காக
உருகி உருகி
எழுதிய வார்த்தைகளால்
உச்சபட்சமாய்
எனக்கென
மிஞ்சிருந்தது
அழகாய் மாறியிருந்த
கையெழுத்தும்
கவியாய் மாற்றியிருந்த
தலைஎழுத்தும் தான்....!

நானாகிப் போன என் காதலன்.!

நானாகிப் போன என் காதலன்.! 

நானாகத்தான் சொன்னேன்
என் காதலை ..

வண்டு வரும் வரை இனி
பொறுமை இல்லை மலருக்கு..

என்னை மொய்த்து விடு
தடையேதுமில்லை உனக்கு..

காதலை சொல்லக்கூட
உன் வாய் வார்த்தை
வீணாக வேண்டாம்
என் பெயரை
உச்சரிக்கையில் மட்டும்
வார்த்தைகள் உயிர் பெறட்டும்...

என்னை உரசி போனவர்களில்
உயிரை உலுக்கி போனவன் தானே நீ ..

வயிற்றுக்கு சோறிடும்
வேலை மட்டுமே உனக்கு..

உன் வாழ்க்கைக்கான
அத்தனைக்கும் இனி நானே பொறுப்பு..

அச்சம் நாணம் எல்லாம்
உன் காதலில் அடகு வைத்து
காதல் இச்சை தீர
கல்யாண மேடையில் எதிர் நின்றேன்..

விளக்கேற்ற வந்தேன்
உன் வீடு தேடி ..
இனி விளக்கணைந்த
நேரங்களில் எல்லாம்
என்னோடு நீ வெளிச்சம் தேடு ..

ஒருவனுக்கு ஒருத்தியாய் வந்தேன்..
உனக்குள் என்னை கரைத்துக்கொண்டு
உலகில் நீ
ஒருவனாகவே இருந்துவிடு ..

உன் பிள்ளை
நான் சுமக்க உன்னிடம்
பிள்ளையாகிப்போன
என்னை உன்னில் ஊற்றி
எனக்கும் சேர்த்து
என் பிள்ளைக்கும்
நீயே அன்னையாகி விடு.. ..

திங்கள், 9 ஏப்ரல், 2012

ஒரு காரணத்தை எப்படி வெளியில் சொல்வேன்..!

விழித்தெழும் ஒவ்வொரு
இரவு வேளையிலும்
ஒவ்வொரு கனவு ..

விஷமுள்ள நாகம்
யாரையோ தீண்டுவதாய்.

நரி ஒன்று
ஊருக்குள் ஊளையிடுவதாய்..

குரங்கு ஒன்று
எதையோ பறித்து போவதாய்..

யானை ஒன்று
பயமுறுத்தி துரத்துவதாய்.

நான் கண்ட
ஒவ்வொரு கனவிற்கும்
பயந்தபடியே பல காரணங்களை
சொல்கிறாள் அம்மா..

அத்தனையும் என்
ஒற்றை குணம்
என்பதை நான்
எப்படி வெளியில் சொல்வேன்..?

பொம்மையோடு கற்ற பாடம்..!

தினமும்
ஏதேதோ பேசுகிறாள்
என் மகள் பொம்மையோடு..

அவள் அயர்ந்த போது
என்ன பேசினாள்
என பொம்மையோடு வினவினேன்..

காட்டிகொடுக்கும் பழக்கம்
எங்கள் குலத்திற்கு இல்லை
என்பது போல் என்னிடம்
மௌனம் மட்டுமே காட்டியது

வெள்ளி, 23 மார்ச், 2012

பாட்டியம்மா...

அப்பா அடித்த போதும்
அம்மா கடிந்த போதும்
நான் ஒளிந்து கொண்டது
அவள் மடி தான்....

வெற்றிலை இடித்துக் கொடுக்கவும்
வெளிக்கு கூட்டிக் கொண்டு போகவும் அவளிடம் விலை பேசியவன் நான்..

அன்று

விளையாட்டின் போதும்
விவரம் தெரிந்த போதும்
பெரிதாய் எனக்குள் தோன்றவில்லை..

இன்று வேலை கிடைத்தும்
எல்லாம் கிடைத்துவிட்ட
வாழ்வு அமைந்தும் அவளின் வெறுமை என்னுள் நீங்கவில்லை..

தேடிக்கொண்டிருக்கிறேன்..
அவளை அழைத்து செல்ல மறுத்த கோவிலிலும்
அவள் அடைந்திருந்த
கொல்லையிலும்..

காணவில்லை
படமாகி விட்ட என் பாட்டி

என் கண்ணீரும் தேடுகிறதே..!

அழும் போதெல்லாம்

நெஞ்சோடு சாய்த்து

அரவனைத்தவனை

எட்டி பார்த்து தேடுகிறது

என்னை போலவே

என் கண்ணீரும்..

என்னை போலவே திணருகிறதே..!

உன்னிடம்

கொடுத்துவிட்ட

நிழலை

இனி எப்படி பூமியில்

பிரதிபலிக்க செய்வது

என என்னை போலவே திணருகிறதே

என் மேல் வீசும்

ஒளிகள் எல்லாம்.....

திங்கள், 23 ஜனவரி, 2012

உன்னை விட்டு செல்கிறேன் தூரமாய்..!

ஏதோ ஒரு மழைநாளில்

உன் ஞாபங்களை

கண்ணீரால் தொலைத்த கையோடு

வானம் போலவே வாழ்வை

வெறுமையாய் களிக்கிறேன்..

வாசித்து எழுதுபவருக்கு மத்தியில்

உன்னை யோசித்து

எழுதிய கவிதைகளை

தீக்கிரையாக்கி குளிர்காய்கிறேன்..

எல்லாம் கொடுத்து விட்டேன்..

கொடுக்காமலே வைத்து கொண்டேன்..

கோபம் மட்டும்

கொஞ்சம் கொஞ்சமாய் அதையும்

நீயே களவாடிக் கொள்ள

உன்னை விட்டு செல்கிறேன்..

இன்னும் தூரமாய்....