வெள்ளி, 6 ஜனவரி, 2012

மறுமுறையாய் காத்திருக்கிறேன்...!

நீ காயப்படுத்திய
வார்த்தைகளோடு காத்திருக்கிறேன்..

மீண்டும் என் பாதையில்
பயனிப்பாய் என பாத்திருக்கிறேன்..

என் நேசம் அறியும்
முன்பே நெஞ்சம் அறிந்தவள் நீ

அதை கொன்று விட்டு போக
வஞ்சம் நினைத்தது ஏன்..!

துணையாகி போன என் நேசம்
இன்று சுமையாகி போனதேன்..

நலமா என்று தான் ஆரம்பித்தேன்.
பின்னாளில் உன் நலமே
என் வாழ்வானது..

இன்று நீ விட்டு போனதில்
வாழ்வே கேள்விக்குறியானது..!

எனை எட்டி போனதில்
காலங்கள் நகராமல் மூர்ச்சையானது..

ஆயினும்....

மறுமுறையாய் காத்திருக்கிறேன்..
மீண்டும் என் பாதையில் பயனிப்பாய்
என பாத்திருக்கிறேன்..

எப்படி முடிகிறது உன் போன்ற சிலரால் ..

புதைக்கப்பட்ட வரலாற்று காதல் தோல்விகள்
உன் போன்றவர்களால் இன்னும்
விதைக்க படுவதேன்..

உன்னால் எனக்குள் வளர்க்கப் பட்ட
நேசம் வேர் கூட மிச்சமின்றி
பறிக்க பட்டதேன்..

விழியிடம் தோற்று வாங்கிய காதலை வலியோடு நினைந்து வாழ்வை
தொலைக்கத் தானா..

அன்று சொல்வதற்கு
தயங்கிய காதலை தான்
இன்று யாரிடமும்
சொல்ல முடியா ரணமானதேன்.

. நியாபகங்கள் சிறகு முளைப்பதை
தடுக்க முடியவில்லை..

உன் சிந்தனையை மனதிற்க்கோ
மறக்க தெரியவில்லை..

உன்னால் மட்டும் எல்லாம் முடிகின்றது..

பொய்மையை பூச்சூடி கொண்டதாளா..

கொன்று விட துடிக்கும்
கோபங்களைக் கூட
மிஞ்சுகிற நேசத்தை
எப்படி மறக்க முடிகின்றது..

உன் போன்ற சிலரால்..

என்று தணியும் இந்த தாகம்..! சிறுகதை

அது ஒரு அரசாங்க மருத்துவமனை.அன்று கிளைக் கட்டிடத் திறப்பு விழா நடந்துக்கொண்டிருந்தது.
மருத்துவமனையின் முதன்மை மருத்துவர்கள்,ஆளுங்கட்சி பிரமுகர்,சினிமா நடிகர் என மேடையே களை கட்டிருந்தது.மருத்துவமனையின் பணியாளர்கள் அத்தனை பேரும் பார்வையாளர்களாய் அங்கு அமர்ந்திருந்தனர்..
மேடையில் இருந்த அரசியல்வாதியாக இருக்கட்டும்,நடிகராகட்டும் அத்தனை பேரும் அங்குள்ள மருத்துவர், நர்ஸ் என அனைவரையும் பாராட்டிய வண்ணம் இருந்தனர்..
"ஐயோ தவிக்குதே ஒரு பொட்டு தண்ணி பக்கத்துல காணாமே.".
இது எலும்பு முறிவு வார்டில் இருந்த நோயாளியின் சத்தம் .
"ஏன்யா கத்துற இங்க ஒருத்தரும் இல்ல எல்லாரும் மீட்டிங் பாக்க போயிருக்காங்க" என்று பக்கத்துக்கு பெட்டில் இருந்த நோயாளி கூறினான் ..
அந்த வார்டில் இருந்த எல்லோருமே கை கால் முறிந்து நடமுடியாதவர்களாய் இருந்தனர்.

"அம்மா நர்சம்மா"
என்று கத்திக் கொண்டே ஒருக்களித்து திரும்பினான் . அப்படி புரண்டு படுத்துக் கொடுத்தது அவனுக்கு வேதனையாக இருந்தது போலும் வலியில் முகம் சுளித்தான்.

"என்னையா கூச்சல் போடறீங்க? நர்சம்மா திட்டுவாங்க" என்று சொல்லிவிட்டு ஓட்டமெடுத்தான் வார்ட் பாய் ..

இதற்கிடையில் அந்த அரசியல்வாதி பேசுவது ஒலிப்பெருக்கி வழியாக கேட்டது.

"இந்த மருத்துவமனை நம் நாட்டுக்கு குறிப்பாக இந்த ஊருக்கு மகத்தான சேவை செய்கிறது என்பதில் சந்தேகமே இல்லை "

எனக் கூற பார்வையாளராய் இருந்த நர்ஸ் , வார்டு பாய் மருத்துவர்கள் என அனைவரும் கரகோஷம் எழுப்பினர். .

"தாகம் " அரற்றினான். அந்த தாப ஜுரக்காரன்.

"யோவ் கொஞ்சம் பொறுயா அவங்க வரவேணா மீட்டிங் எப்போ முடியுமோ."

"எப்படிங்க பொருக்குறது என்னால முடியலையே." என அவன் நெளிந்தான்
.
இதைக் கண்ட மூன்றாவது பெட் காரன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. சட்டென்று எழுந்து இருக்கும் ஒத்தக்காலை வைத்து நொண்டி அடித்துச் சென்று எப்படியோ தத்தி தாவி தண்ணீர் பானைக்கு அருகே சென்றது தான் தாமதம்.
தடுமாறி பானை உடைய சத்தம் கேட்டு ஓடி வந்த வார்டு பாய் இதைப் பார்த்து விட்டு நர்சிடம் சொல்ல
வேண்டா வெறுப்பாய் எழுந்து வந்தவர் "யோவ் என்னய்யா பண்ற சுத்த நான்சென்ஸா இருக்க கொஞ்ச நேரம் மீட்டிங் பார்க்க விடறீங்களா போய்யா எடத்துக்கு பெரிய டாக்டர் வரட்டும் உங்க எல்லாரையும் கம்ப்ளைன்ட் பண்றேன்" .
என கத்திவிட்டு அவர்களின் பதிலுக்கு காத்திருக்காமலே மீட்டிங் காணும் ஆவலில் ஓடினாள்.
வார்டு முழுக்க மௌனம் .
ஒலிபெருக்கியில் சத்தம் அதிகமாய் கேட்டது.
"இந்த மருத்துவமனியில் நோயாளியாக வந்து இப்பேற்பட்ட நர்ஸ்களின் சேவையை பெற எனக்கும் கூட ஆசையாக இருக்கிறது ."

என அந்த நடிகர் சொல்ல கரகோஷம் அந்த கட்டிடத்தையே கிடுகிடுக்க செய்தது.......

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

பேர்ல மட்டும் மிச்சம் வச்சோம் நம்ம ஒரவ..!

முண்டி அடிச்சு எனக்கும்
சேர்த்து சாப்பாட்டுக்கு
நிப்பியே பள்ளிக்கொடத்துல.....

ஜன்னலோரம் சீட்டு பிடிச்சு
எனக்கா விட்டு கொடுப்பியே
பஸ்சு ஏறயிலே..

என் மேல உரசிக்கிட்டு
ஊர் கத பேசுவியே
எறங்குற வரையில..

பருவம் திறந்து விட
பாவாடை மறச்சி என்னை
கொண்டாந்து சேத்தியே வீடு வரையில..

கல்யாணம் கட்டாம கடைசி வரைக்கும் இருப்போம்ன்னு கதை
அளந்துகிட்டோமே படிக்கையில..

சொல்லி தான் வாய் மூடல
வருசம் கூட ஒன்னு ஏறல..

கல்யாண சந்தையில கட்டி விட்டாக
நாங்க காணாத தூரமா பிரிச்சி வச்சாக..

பிரிகையில ஒரு தடவ பாத்துகிட்டோம்..

ஒன் பிள்ளைக்கு என் பேரும்
என் புள்ளைக்கு ஓன் பேரும்
வைக்கனும்னு சொல்லி வச்சுக்கிட்டோம்.. .

நெனச்சபடியே பேரு வச்சோம்..
அந்த பேர்ல மட்டும் thaana
நம்ம உறவ மிச்சம் வச்சோம்.. !

வியாழன், 3 நவம்பர், 2011

ஆதலினால் காதல் செய்வீர் ..!

நிமிடங்கள் பேசினால் போதும்

வருடத்திற்கும் வேண்டிய

கவி வார்த்தைகள் கிடைக்கும்...!

.நொடி தனில்

நோக்கினால் போதும்

நினைவுகளே மருந்தாய் மாறும்

அதிசய நோய் வந்து நிலைக்கும்..!

பாதையின்றி பயணிக்கும்

கால்களுக்கு பட்டாம் பூச்சியென

பறக்கும் சிறகு முளைக்கும்..!

வாசமின்றி இருக்கும்

இதயப் பூவிற்கு

புது சுவாசம் கண்டு

மலரச் செய்யும்..!

மரித்து விட்ட தேகமாய் இருக்கும்

வாழ்வையும் மகிழ்ச்சி வெள்ளத்தில்

நீந்த செய்யும் ...!

உனக்குள்ளே உரக்க

சிரிக்க வைக்கும்

காதலை பெறுவது சுலபமில்லை..!

பெற்றுவிட்டால். வானம் கூட

தொட்டுவிடும் எல்லை ...!

ஆகையினால் காதல் செய்வீர்...

பிழை ஒன்றும் இல்லை..!

செவ்வாய், 1 நவம்பர், 2011

கல்லறை சுகம் தேடி...!

உனக்கும் எனக்குமான

இடைவெளியை இன்றுவரை

காதல் நிரப்பிக் கொண்டிருக்க...!

ஞாபகங்கள் சிறகு முளைத்து

என் உயிர் வானை

அளந்து கொண்டிருக்க...!

தெரியாமல் நான்

நழுவ விட்ட கணங்களையும்...

தெரிந்தே என்னை

தவறவிட்ட ரணங்களையும்...

காலங் கடந்தும்

நினைத்து கதறுகிறேன்...

கணத்த இதயத்தோடும்.. ..

கல்லறை சுகம் தேடி

பயணப்படுகிறேன்..

வெற்றிடமாகி விட்ட வாழ்வோடும்..