செவ்வாய், 17 ஏப்ரல், 2012

நானாகிப் போன என் காதலன்.!

நானாகிப் போன என் காதலன்.! 

நானாகத்தான் சொன்னேன்
என் காதலை ..

வண்டு வரும் வரை இனி
பொறுமை இல்லை மலருக்கு..

என்னை மொய்த்து விடு
தடையேதுமில்லை உனக்கு..

காதலை சொல்லக்கூட
உன் வாய் வார்த்தை
வீணாக வேண்டாம்
என் பெயரை
உச்சரிக்கையில் மட்டும்
வார்த்தைகள் உயிர் பெறட்டும்...

என்னை உரசி போனவர்களில்
உயிரை உலுக்கி போனவன் தானே நீ ..

வயிற்றுக்கு சோறிடும்
வேலை மட்டுமே உனக்கு..

உன் வாழ்க்கைக்கான
அத்தனைக்கும் இனி நானே பொறுப்பு..

அச்சம் நாணம் எல்லாம்
உன் காதலில் அடகு வைத்து
காதல் இச்சை தீர
கல்யாண மேடையில் எதிர் நின்றேன்..

விளக்கேற்ற வந்தேன்
உன் வீடு தேடி ..
இனி விளக்கணைந்த
நேரங்களில் எல்லாம்
என்னோடு நீ வெளிச்சம் தேடு ..

ஒருவனுக்கு ஒருத்தியாய் வந்தேன்..
உனக்குள் என்னை கரைத்துக்கொண்டு
உலகில் நீ
ஒருவனாகவே இருந்துவிடு ..

உன் பிள்ளை
நான் சுமக்க உன்னிடம்
பிள்ளையாகிப்போன
என்னை உன்னில் ஊற்றி
எனக்கும் சேர்த்து
என் பிள்ளைக்கும்
நீயே அன்னையாகி விடு.. ..

1 கருத்து:

  1. காதலை சொல்லக்கூட
    உன் வாய் வார்த்தை
    வீணாக வேண்டாம்
    என் பெயரை
    உச்சரிக்கையில் மட்டும்
    வார்த்தைகள் உயிர் பெறட்டும்...

    தவமிருந்த வரிகள்

    பதிலளிநீக்கு